தேனி மாவட்டம் குள்ளப்பகவுண்டன்பட்டி பகுதி மக்கள் தங்கள் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டிக்கக்கூடாது என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
அப்போது பொதுமக்கள், ”கடந்த 2016 ல் குடிநீர் குழாய் இணைப்புக்கு வைப்பு தொகை ரூபாய் 1000 க்கு ரசீது செலுத்திவிட்டோம். அதன் பின்பு மாதந்தோறும் குடிநீர் குழாய் கட்டணம் செலுத்தி வந்தோம். இதற்கிடையில் தற்போது உள்ள ஊராட்சி தலைவர் நீங்கள் கட்டிய ரசீது செல்லாது. எனவே புதியதாக வைப்பு தொகை செலுத்த வேண்டும், மேலும் சுமார் 60 மாதங்களுக்கு குடிநீர் கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் எனக் கூறியதாக தெரிவித்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் ரா. சந்திரசேகர் போராட்டம் செய்தவர்களை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில், குழாய் இணைப்பை துண்டிப்பதில்லை என்றும் பழைய வைப்புத்தொகை ரசீது பெற்றவர்கள் தற்போது ஆயிரம் ரூபாய் மட்டும் செலுத்தி, கரோனா ஊரடங்கு முடிந்த பின்பு மீதி தொகை செலுத்தலாம் என்று கூறிய பின்பு போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.