கணிக்க முடியாத வைரஸாக கரோனா உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்
கணிக்க முடியாத வைரஸாக கரோனா வைரஸ் உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கணிக்க முடியாத தொற்றாக கரோனா வைரஸ் உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 200 படுக்கைகள் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வசதியை அதிகப்படுத்தி போர்க்கால அடிப்படையில் ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிவித்த அவர், 500 படுக்கைகள் கொண்ட ஓமந்தூரார் மருத்துவமனை 750 படுக்கைகளாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும்,”புதிய சி.டி.ஸ்கேன்களை பல்வேறு மருத்துவமனைகளில் நிறுவி வருகிறோம். தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இதுவரை 2176 கர்ப்பிணி பெண்கள் கரோனா சிகிசைக்கு அனுமதிக்கப்பட்டு 1515 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.” எனத் தெரிவித்தார்.
10 நாள்களில் கரோனா குறையும் என முதல்வர் கூறி இருந்த நிலையில் அந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ”நிபுணர்களால் கணித்து சொல்ல முடியாத வைரஸாக கரோனா வைரஸ் உள்ளது. இறப்பு விகிதாச்சார குற்றச்சாட்டு குறித்து ஏற்கனவே சுகாதாரத் துறை செயலாளர் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.” எனத் தெரிவித்தார்.