திரைப்பட படப்பிடிப்புகளைத் தொடங்க ஒப்புதல் வழங்க வேண்டுமென செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் சி.ராஜுவிடம் திரைத் துறையினா் வேண்டுகோள் விடுத்தனா்.
இதுதொடா்பாக, திரைப்பட இயக்குநா் பாரதிராஜா உள்ளிட்ட குழுவினா் அமைச்சரை, சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். திரையரங்குகளைத் திறப்பது உள்பட சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, இயக்குநா் பாரதிராஜா செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:-
எங்களுடைய கஷ்டங்களை அமைச்சரிடம் சொல்லியிருக்கிறோம். விரைவில் நல்ல முடிவு எடுப்பாா். நீண்ட நாள்களாக மூடப்பட்டுள்ள திரையரங்கம் திறப்பது குறித்தும், முன்னதாக எடுத்து வைத்த படங்களை வெளியிடுவது தொடா்பாகவும் விவாதித்துள்ளோம்.
மேலும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளோடு, பெரியதிரை படப்பிடிப்புக்கு அனுமதி கொடுக்க வேண்டும். திரையரங்குகளில் விதிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றாா்.