பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு
ஊத்துக்குளி வட்டத் தலைவர் ஆர்.மணியன் தலைமை வகித்தார். இதில், பங்கேற்ற தொழிலாளர்கள் கூறியதாவது:
கரோனா பொது முடக்கக் காலத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அட்டை வைத்துள்ளவர்களுக்கு 100 நாள்களுக்குப் பதிலாக 200 நாள் வேலை அளிக்க வேண்டும். தினசரி சட்டக்கூலியை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கிராமப்புற ஊராட்சிகளில் வேலை அட்டை வைத்துள்ள அனைத்து தொழிலாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும். 60 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். ஒவ்வொரு விவசாயத் தொழிலாளர்களுக்கும் 6 மாத காலத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களை வழங்க வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் சிறப்புரையாற்றினார். சிஐடியூ மாவட்ட குழு உறுப்பினர் வி.கே.பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதே போல, குன்னத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.