முகப்பு
தமிழ்நாடு

கிண்டி கிங் ஆய்வக வளாகத்தில் 500 படுக்கை வசதிகளுடன் புதிய மருத்துவமனை: விஜயபாஸ்கர்

கிண்டியில் உள்ள கிங் ஆய்வக வளாகத்தில் 500 படுக்கை வசதிகளுடன் புதிய மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:46 PM
பகிர்:


சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக வளாகத்தில் 500 படுக்கை வசதிகளுடன் புதிய மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கிண்டியில் உள்ள கிங் ஆய்வகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இந்த தகவலை தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், அடுத்து வரும் நாள்கள் எப்படி இருக்கும் என்பதை கவனத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், சென்னை கிண்டியில் உள்ள கிங் பரிசோதனை ஆய்வக வளாகத்துக்குள் 500 படுக்கை வசதிகள் கொண்ட அதிநவீன மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளும் கொண்டதாக ஒவ்வொரு படுக்கையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பணியாற்ற 81 சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

துறைமுகம் பழைய வளாக மருத்துவமனையில் 300 படுக்கை வசதிகளும், எழும்பூர் கண் மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகளும் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான மருத்துவர்களும் ஓரிரு நாள்களில் நியமிக்கப்படுவார்கள். அவுட்சோர்சிங் முறையில் தொடர்ந்து மருத்துவப் பணியாளர்களை நியமித்து வருகிறோம்.

கரோனா சிகிச்சை அளிக்க இதுவரை 88 தனியார் மருத்துவமனைகள் முன் வந்துள்ளன. ஸ்டாப் கரோனா இணையதளத்தில் 88 மருத்துவமனைகளும், தங்கள் மருத்துவமனையில் காலியாக இருக்கும் படுக்கை வசதிகள் குறித்து பதிவு செய்ய ஒப்புக் கொண்டுள்ளன. இந்த பணியில் மேலும் பல தனியார் மருத்துவமனைகள் இணைய உள்ளன என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →