முகப்பு
தமிழ்நாடு

மகளிருக்கு தனித் துறை, அண்ணன் சீர், தாய்மாமன் திட்டங்கள்! விஜய் வெளியிட்ட வாக்குறுதி

மகளிருக்கு தனித் துறை, அண்ணன் சீர், தாய்மாமன் திட்டங்கள் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை விஜய் வெளியிட்டார்.

Updated On : 7 மார்ச், 2026 at 6:19 PM
தவெக தலைவர் விஜய் - ANI
பகிர்:

மகளிருக்கு தனித் துறை, அண்ணன் சீர், தாய்மாமன் சீர் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை, மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற தவெகவின் மகளிர் தின கொண்டாட்டத்தின்போது, கட்சித்தலைவர் விஜய் வெளியிட்டார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கட்சித் தலைவர் விஜய் தலைமையில் மகளிர் நாள் விழா, இன்று மாலை மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

விழாவில் பங்கேற்று பேசிய விஜய், பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

Advertisement

அவற்றில்,

1. பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கான தனித் துறை உருவாக்கப்படும். இந்த துறை முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில், கண்காணிப்பில் இருக்கும்.

2. மதிப்பு மிக்க மகளிர் திட்டம் கொண்டு வரப்படும். இந்த திட்டத்தின் கீழ் மாதம் மாதம் 60 வயது வரை உள்ள அனைத்து பெண்களுக்கும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும். இதில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் விதிவிலக்கு.

3. அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆறு சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.

4. அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் திருமணத்தின்போது மணப்பெண்ணுக்கு 8 கிராம் தங்கம், பட்டுச் சேலை வழங்கப்படும்.

5.காமராஜர் கல்வி உறுதி திட்டத்தின் கீழ், மாணவிகள் இடை நிற்றலைத் தடுக்கும் வகையில், அதற்குக் காரணமாக இருக்கும் பொருளாதார தடையை உடைக்க பெண்களைப் படிக்க வைக்கும் ஒவ்வொரு தாய் /பாதுகாவலருக்கும் ரூ.15,000 பொருளாதார உதவித் தொகை வழங்கப்படும்.

6. வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் அரசுப் போக்குவரத்தின் அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணம் இன்றி பயணம் செய்ய வசதி ஏற்படுத்தப்படும்.

7. பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்துக்கொள்ள மாட்டோம். அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

அதன்படி,

ஏ. ராணி வேலு நாச்சியார் படை உருவாக்கி, சாதாரண உடையில் சீருடையில் கேமரா பொருத்தப்பட்டு, பெண் படை செயல்படும். மாநிலம் முழுக்க 500 குழுக்கள் இவ்வாறு இயங்கும்.

பி. அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.

சி. பொதுப் போக்குவரத்து வாகனங்களில் அவசர அழைப்பு பொத்தான் உருவாக்கப்படும். 5 நிமிடத்தில் பதிலும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.

டி. இருட்டற்ற பகுதிகள் திட்டத்தில், சிசிடிவி பொருத்தப்பட்டு, வெளிச்சம், விளக்கு இல்லாத இடங்களே இல்லை என்ற நிலை ஏற்பட்டுத்தப்படும்.

இ. விலையில்லா சானிட்டிரி நாப்கின் வழங்கப்படும்.

8.சிங்கப்பெண்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை வட்டி இல்லா கடன். வழங்கப்படும். இதற்கு 100% மானியம் வழங்கப்படும்.

9. தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தில், தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்துள்ளார்.

summary

Vijay made election promises including a separate department for women, elder brother care, and maternal uncle schemes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.