நெல்லை: தமிழகத்தில் புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங், கரோனா பாதித்திருந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹரிசிங் மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ஹரிசிங். இந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக அவர் இன்று தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்கலாம்.. திருநெல்வேலி 'இருட்டுக்கடை அல்வா'வின் புகழ்
இருட்டுக்கடையின் உரிமையாளர்களான ஹரிசிங் மற்றும் அவரது மருமகனுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவர்கள் வசித்து வந்த பகுதியில், சுகாதாரப் பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோயிலுக்கு எதிரே, எந்த விளம்பரமும், ஆடம்பரமும் இல்லாமல், ஒரே ஒரு குண்டு பல்புடன் இயங்கி வருகிறது இருட்டுக்கடை ஹல்வா. நெல்லை மாவட்டத்துக்கே புகழ் சேர்க்கும் இருட்டுக் கடை அல்வாவின் தாயகம் ராஜஸ்தான்.
1930 - 1940களில், ராஜஸ்தானைச் சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் நெல்லை மாவட்டத்தில் நெல்லையப்பர் கோயிலுக்கு எதிரே தொடங்கியதுதான் இந்த அல்வா கடை. வெறும் ஹரிகேன் விளக்குடன் இருட்டாக இருக்கும் இந்தக் கடையை மக்கள்தான் இருட்டுக் கடை என்று அடையாளப்படுத்தினர். பிறகு அதுவே கடையின் பெயராகவும் மாறியது.