முகப்பு
தமிழ்நாடு

தந்தை-மகன் உடலில் மோசமான காயங்கள்; வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம்: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் ஆகியோரது உடலில் மோசமான காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளதால்,

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
ஜெயராஜ் - பென்னிக்ஸ்
பகிர்:


மதுரை: சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் ஆகியோரது உடலில் மோசமான காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளதால், காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம் குறித்தும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது, தந்தை - மகன் மரணம் தொடர்பான விசாரணைக்கு தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் தடயங்கள் மறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. விசாரணையைத் தொடங்கும் முன்பே தடயங்களை மறைக்க வாய்ப்பு உள்ளது.
விசாரணையை உடனடியாக துவங்குவது குறித்து வாய்ப்பு இருக்கிறதா என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும், தந்தை - மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுக்கும் வரை, நெல்லை டிஐஜி அல்லது நெல்லை சிபிசிஐடி விசாரணையைத் தொடங்க இயலுமா? என்று கேள்வி எழுப்பி, இது குறித்து இன்று மதியம் 12 மணிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். நீதிகிடைக்கும் என்று ஜெயராஜ் குடும்பத்தினர் நம்புகிறார்கள். எனவே விசாரணைக்கு ஒரு நொடி கூட தாமதிக்கக் கூடாது.

நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாகத் தொடரப்பட்ட  நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  விசாரணைக்கு வந்த மாஜிஸ்திரேட்டை காவல் துறை உயர் அதிகாரிகள் அவமதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தனர்.

மாஜிஸ்திரேட்டிடம் மன அழுத்தத்தில் காவலர்கள் தவறு செய்து விட்டனர் என்று தமிழக அரசு விளக்கம் அளித்தது.

இதை ஏற்காத நீதிபதிகள், நீதிபதியை அவமதித்த சம்பவத்தில், கூடுதல் எஸ்.பி., டி.எஸ்.பி. மற்றும் காவலர்கள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், உயிரிழந்த தந்தை - மகன் உடலில் மோசமான காயங்கள் இருப்பது உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தெரிய வந்திருப்பதால், காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்றும் உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →