வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு
தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டி வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்களில் பின்பற்றப்பட வேண்டி வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுபற்றி தமிழக அரசின் வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குள்பட்ட பகுதிகள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் ஆண்டு வருமானம் ரூ. 10,000-க்கும் குறைவாக செயல்பட்டு வரும் சிறிய கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் மற்றும் மற்ற வழிபாட்டுத் தலங்களில் ஜூலை 1 முதல் பொது மக்கள் வழிபாட்டுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லியில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகள், சோழவரம் பிளாக், செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்குளத்தூர் பிளாக்கில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகள் மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் பிளாக்குகளில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் ஜூலை 6-ஆம் தேதி முதல் பொது மக்கள் வழிபாட்டுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
- நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி கிடையாது.
- 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், வேறு நோய் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்குள்பட்ட குழந்தைகள் உள்ளிட்டோர் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
- பொது இடங்களில் கட்டாயமாக குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். வரிசையில் நிற்கும்போதும் இதைப் பின்பற்ற வேண்டும்.
- முகக் கவசங்கள் அணிவது கட்டாயம். முகக் கவசம் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும்.
- இருமும்போதும், தும்மும்போதும் கைக்குட்டைகளால் அல்லது முழங்கையால் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும்.
- பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது.
- ஆரோக்ய சேது செயலி கட்டாயம் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- நுழைவாயிலில் சானிடைஸர்களை வைக்க வேண்டும். முடிந்தால், தெர்மல் ஸ்கீரினிங் செய்ய வேண்டும்.
- அறிகுறி இல்லா நபர்களை மட்டுமே அனுமதியளிக்க வேண்டும்.
- வழிபாட்டுத் தல வளாகங்களில் இருக்கும் கடைகள், தேநீர் கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
- வளாகத்துக்குள் நுழையும் முன் கை மற்றும் கால்களை சோப்பு போட்டு கைகழுவ வேண்டும்.
- சிலை உள்ளிட்டவற்றைத் தொட்டு வழிபட அனுமதி கிடையாது.
- 5 பேருக்கு மேல் கூட தடை.
- வழிபாட்டுத் தல வளாகங்களில் பிரசாதம், தீர்த்தம் உள்ளிட்டவற்றை வழங்க அனுமதி கிடையாது.
- அன்னதானம் உள்ளிட்டவற்றுக்கு உணவு தயாரிக்கும்போது மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
- அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் அரசின் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தி, கண்காணிக்க கரோனா பாதுகாப்புக் குழுவை அமைக்க அறிவுறுத்தப்படுகிறது.