பல்லடம் வங்கியில் ரூ.18 லட்சம் திருடிய வழக்கில் கைதான இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்
பல்லடம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.18 லட்சம் திருடிய வழக்கில் கைதான இளைஞர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
பல்லடம் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.18 லட்சம் திருடிய வழக்கில் கைதான இளைஞர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வி.கள்ளிபாளையத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து ரூ.18. லட்சம் ரொக்கத்தை கடந்த சில நாள்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக காமநாயக்கன்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் திருட்டில் ஈடுபட்ட நபர்களைப் பிடிக்க திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் உத்தரவின்பேரில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்தத் தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வங்கிக்கு அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள், பழைய குற்றவாளிகள், வங்கிக்கு அருகே தங்கியுருந்த வடமாநிலத்தவர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர். தில்லியில் கைதான இளைஞருக்குத் தொடர்பு: இதனிடையே, ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு வங்கியில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி கொள்ளை நடந்துள்ளது.
இந்தக் கொள்ளை தொடர்பாக ஹரியாணா காவல் துறையினர் தில்லியில் வைத்து பிப்ரவரி 26 ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, நடத்திய விசாரணையில், ஹரியாணாவைச் சேர்ந்த அனில் சிங்(32) என்பதும், பல்லடம் வங்கித் திருட்டில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக ஹரியானா காவல் துறையினர் காமநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதன் பேரில், காவல் ஆய்வாளர் அருள் தலைமையில் உதவி ஆய்வாளர், காவலர் என 3 பேர் கொண்ட தனிப்படையினர் ஹரியாணா சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில், அனில் சிங்கை சனிக்கிழமை ஆஜர்படுத்தும்படி பல்லடம் ஜே.எம்.நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் பேரில் ஹரியாணா சென்ற காமநாயக்கன்பாளையம் காவல் துறையினர் இந்த வழக்கில் கைது பலத்த பாதுகாப்புடன் பல்லடம் நீதிமன்றத்தில் சனிக்கிழமை 5 மணி அளவில் ஆஜர்படுத்தியுள்ளனர்.