தாராபுரத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட உழவர் சந்தையில் விதிமுறைகளைக் கடைபிடிக்காத பொதுமக்கள்
தாராபுரத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட உழவர் சந்தையில் சமூக விலகலை பொதுமக்கள் கடைபிடிக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தாராபுரத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட உழவர் சந்தையில் சமூக விலகலை பொதுமக்கள் கடைபிடிக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள்பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய்தொற்று பரவலைத் தடுக்கும் வரையில் பொதுமக்கள் சமூக விலகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆகவே, தாராபுரம் உழவர் சந்தையில் கூட்ட நெரிசலைக்கட்டுப்படுத்தும்வகையிலும், பொதுமக்களுக்கு காய்கறிகள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் என்.சி.பி.நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்துக்கு உழவர் சந்தை, தினசரி மார்க்கெட் ஆகியன சனிக்கிழமை முதல் மாற்றப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் இடையே 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். பொதுமக்கள் குறியீடு செய்யப்பட்டுள்ள கட்டங்களில் நின்று கொண்டு வரிசையாக இடைவெளி விட்டுச் சென்று பொருள்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், உழவர் சந்தை, தினசரி மார்க்கெட்டில் காலை 6 மணி முதலே அதிக அளவிலான பொதுமக்கள் காய்கறி வாங்கத் திரண்டனர். இதனால் கடைகளில் ஒருவருக்கு ஒருவர் சமூக விலகலைக்கடைபிடிக்கவில்லை.மேலும்,வியாபாரிகள், பொதுமக்கள் முகக் கவசம் இல்லாமலும் இருந்துள்ளனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சமூக ஆர்வலர்கள் தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமாருக்குப் புகார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் கூடுதல் காவல் துறையினரைப் பணியில் அமர்த்தி விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.