ஈரோடு நேதாஜி காய்கறி சந்தை பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஈரோடு ஆர்கேவி சாலையில் நேதாஜி காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது. இங்கு மொத்த வியாபாரமும் சில்லறை வியாபாரம் நடைபெற்று வந்தது. ஈரோடு மட்டுமின்றி கர்நாடகம், ஆந்திர மாநிலங்களிலிருந்து வரும் காய்கறிகள் விற்பனைக்கு வரும்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேதாஜி காய்கறி சந்தை வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை அழைத்து ஆட்சியர் சி. கதிரவன் ஆலோசனை நடத்தினார் அதன்படி நேதாஜி காய்கறி சந்தை ஈரோடு பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான பணிகளை மாநகராட்சி ஆணையர் எம். இளங்கோவன் , எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து இன்று நேதாஜி காய்கறி சந்தை ஈரோடு பேருந்து நிலையத்தில் செயல்படத் தொடங்கியது.
சேலம் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் கடைகள் செயல்படத் தொடங்கியது. இங்கு 200-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டன. வாடிக்கையாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு காய்கறி வாங்கும் வகையில் வட்டம் போடப்பட்டிருந்தது.
மேலும் ஒரு கடைக்கு 3 மீட்டர் இடைவெளி விட்டு மற்றொரு கடைகள் இருந்தது. காய்கறி வாங்க வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கையில் சோப்பு போட்டுக் கழுவிய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சில்லறை விற்பனை இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை நடந்தது. மொத்தவிற்பனை இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை நடந்தது காய்கறி வியாபாரிகளுக்கு ஏற்கனவே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது அவர்களைத் தவிர வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வாடிக்கையாளர்கள் கொண்டு வந்த இருசக்கர வாகனங்கள் தனியாக நிறுத்த இடமும் வியாபாரிகளின் இருசக்கர வாகனங்கள் தனியாக நிறுத்த இடமும் ஒதுக்கப்பட்டன.
மேட்டூர் சாலை வழியாக ஈரோடு பேருந்து நிலையத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டனர். காய்கறிகளை வாங்கிக்கொண்டு பின்னர் ஈரோடு மூப்பட்டறை வழியாக வெளியே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இரு நுழைவாயிலும் காவல்துறை தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். காய்கறி வாங்க வந்த பெரும்பாலான மக்கள் முக கவசம் அணிந்து வந்தனர்.
இதுபோல் ஈரோடு சம்பத் நகர் மற்றும் பெரியார் நகரில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை இன்று முதல் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுச் செயல்படத் தொடங்கியது.உழவர் சந்தை வியாபாரிகளுக்கு ஏற்கனவே அடையாள அட்டை வழங்கப்பட்டு விட்டன.
இங்கேயும் கோரோனா தடுப்பு நடவடிக்கையா ஒரு கடைக்கும் மற்றொரு கிடைக்கும் 3 மீட்டர் இடைவெளி விட்டு வைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களும் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டம் போடப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்களும் அந்த வட்டத்தில் நின்று காய்கறிகளை வாங்கி சென்றனர். காய்கறியை வாங்கும் முன் வாடிக்கையாளர்கள் சோப்பு போட்டு நன்றாக கை கழுவிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வாகனங்களை நிறுத்தும் இடங்களை அடையாளம் காட்டினார்.
காய்கறி வாங்கியவுடன் பொதுமக்கள் அங்கிருந்து வெளியே செல்ல வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டே இருந்தனர். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடந்த உழவர் சந்தையில் 50 க்கும் மேற்பட்ட கடைகள் திறந்திருந்தன 75 சதவீதம் வியாபாரமானதாக விவசாயிகள் தெரிவித்தனர். உழவர் சந்தை தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.