மதுரையில் கரோனா சிறப்பு மருத்துவமனை தயார்
கரோனா வைரஸ் நோய் பாதிப்புக்கு ஆளாகும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி மருத்துவமனை மதுரையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய் பாதிப்புக்கு ஆளாகும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி மருத்துவமனை மதுரையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உடன் இணைந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கடந்த ஓராண்டுக்கு முன்பு திறக்கப்பட்டது. ரூபாய் 300 கோடி செலவில் நவீன உபகரணங்களுடன் கட்டப்பட்ட இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இங்கு சிறுநீரக மருத்துவம், சிறுநீரக அறுவை சிகிச்சை, நரம்பியல் மருத்துவம், நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவுகள் இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கரோனா சிகிச்சைக்கான தனி மருத்துவமனைகள் திறக்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது
இதன்படி சென்னை வேலூர் திருச்சி உள்ளிட்ட நகரங்களில் சிகிச்சை மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மதுரையில் செயல்பட்டுவந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையானது கரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
இங்கு செயல்பட்டுவந்த 4 சிகிச்சை பிரிவுகளும் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு திங்கட்கிழமை இரவு மாற்றப்பட்டன. அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏற்கெனவே கரோனா நோயாளிகளுக்கான பிரத்தியேக வார்டு உள்ளது. அதில் எட்டு படுக்கைகள் உள்ளன. மேலும் 10 படுக்கைகளுடன் தனி வார்டும் அமைக்கப்பட்டு வருகிறது.
அதேபோல மதுரையை அடுத்த ஆஸ்டின் பட்டியில் உள்ள காசநோய் மருத்துவமனையிலும் கரோனா கிச்சைக்கான வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையானது 400 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டு உள்ளது. தென் மாவட்டங்களுக்கான கரோனா மருத்துவமனையாக இது செயல்படும்.