இணையக் கற்றலும்... இடர்காலச் சிக்கலும்...
கரோனா போன்ற பேரிடர் காலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் பலனைத் தருவதற்கு பதிலாக மன அழுத்தத்தையே
சென்னை: கரோனா போன்ற பேரிடர் காலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் பலனைத் தருவதற்கு பதிலாக மன அழுத்தத்தையே தருகிறது என பெற்றோர், கல்வியாளர்கள், உளவியல் ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த விடுமுறையில் குழந்தைகளுக்கு பெற்றோர் வாழ்வியல் சார்ந்த விஷயங்களையும், திறன் வளர் பயிற்சிகளையும் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்கள் மூலம் ஸþம் செயலி, கூகுள் கிளாஸ் ரூம், ஸ்கைப் போன்றவற்றின் மூலம் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளனர். மேலும், பெற்றோர்களை ஒருங்கிணைத்து "வாட்ஸ்அப்' குழுக்கள் வழியாக பாடங்கள், பயிற்சிகள் மற்றும் சிறு-குறு தேர்வுகளுக்கான கேள்விகள் பகிரப்படுகின்றன.
Advertisement
குறிப்பாக, போட்டித்தேர்வு எழுத இருக்கும் தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் பெரும்பாலான பள்ளிகள், அரசு ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே பள்ளிகளுக்கு விடுமுறை விட்டிருந்தன. அதனால், ஆசிரியர்களும் மாணவர்களுக்கான பயிற்சிகளை அதற்கேற்றவாறு தயார் படுத்திக்கொண்டனர்.
ஏழை மாணவர்களுக்கு... அதேவேளையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள், காணொலிகள் ஆகியவை "எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கல்வித் தொலைக்காட்சியில் பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. ஆனால் சிபிஎஸ்இ அல்லது தனியார் பள்ளிகளைப் போன்று ஆன்லைன் வகுப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை. இதற்காக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் "எஜுசாட்' மூலம் ஒத்திகையில் ஈடுபட்டும் அது எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்காததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. கற்றல் சார்ந்த வாய்ப்புகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படும்போது அது பாரபட்சத்தை ஏற்படுத்தும். மேலும், வசதி படைத்த குழந்தைக்கு கிடைத்த கற்றல் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தை ஏழை மாணவர்களிடையே உருவாக்கும். மேலும், கோடை விடுமுறையில் கற்றல் சாராத அதேவேளையில், திறன் வளர்க்கும் பயிற்சிகளை குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுத் தர வேண்டும் என கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சமமான வாய்ப்புகள் இல்லை: இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியது: பல வகையான குழந்தைகளும் பள்ளிக்கு வருகின்றனர். பேரிடர் காலத்தில் வீட்டில் அடைப்பட்டுள்ள குழந்தைகள் அனைவருக்கும் வாய்ப்பும் வசதியும் ஒரே மாதிரியாக இல்லை. அனைவரிடமும் கணினி, மடிக்கணினி, ஸ்மார்ட் செல்லிடப்பேசி வசதி இல்லை. அவ்வாறு இருக்கும் நபர்களுக்கும் நகர்ப்புறங்களில் கூட இணையதள வேகம் சீராக கிடையாது. வைஃபை இணைப்பு அனைத்து இடத்திலும் கிடைப்பது இல்லை.
இவ்வளவு சிக்கலுக்கு இடையில், உயிரைக் காப்பதே பெரும் போராட்டம் என்ற சூழலில் பாடத்தை படி என்பது நியாயமாக இருக்காது. குழந்தைகளுக்கும் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அனைத்து வசதியும் வைத்துக்கொண்டு வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் நபர்களை மட்டும் கருத்தில் எடுத்து செயல்பட நினைப்பது சமத்துவ கோட்பாட்டுக்கு எதிரானது. எல்லாவற்றுக்கும் மேலாக ஊரடங்கு என்பது விடுமுறை காலம் அல்ல. இது சுகாதார பேரிடர் காலம். நோய்த்தொற்று குறித்த அச்சமும் பதற்றமும் நிறைந்திருக்கும் சமூகச் சூழல். இத்தகைய சூழலில் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி இணையதள வகுப்பில் அமரச் செய்வது நியாயமற்ற அணுகுமுறை என்றார்.
குழந்தைகளைப் புரிந்து கொள்ளுங்கள்: இது குறித்து உளவியல் நிபுணர் அபிலாஷா கூறியது: மன அழுத்தம் என்பது பெரியவர்களுக்கு மட்டுமல்ல; குழந்தைகளுக்கும் இருக்கும் என்பதை பெற்றோர் உணர வேண்டும். கற்பித்தலில் உளவியல் சார்ந்த விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இக்கட்டான சூழலில் எங்கேயோ ஒரு மூலையிலிருந்து ஆன்லைன் மூலமாக பள்ளிக் குழந்தைகளுக்கு கற்பிப்பது, வீட்டுப் பாடங்களைச் செய்யச் சொல்வது சரியாக இருக்காது என்பதே எனது கருத்து. அதேவேளையில் பாடங்களுக்கு பதிலாக விளையாட்டுகள், பொது அறிவு போன்ற திறன் வளர் பயிற்சிகளை அளித்தால் அதை வரவேற்கலாம். ஆன்லைன் வகுப்புகள், செயலிகள் குறித்த புரிதலே இல்லாத பள்ளிக் குழந்தைகளுக்கு வகுப்பறைச் சூழலை உருவாக்க முயற்சிப்பது பலனை தராது.
கரோனா விடுமுறை பெற்றோர் தங்களது குழந்தைகளை நன்கு புரிந்து கொள்வதற்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாகும்.
இதைப் பயன்படுத்தி அவர்களுக்கு வாழ்வியல் சார்ந்த விஷயங்களைக் கற்றுத்தர வேண்டும். சமைத்தல், வீட்டைத் தூய்மை செய்தல், ஓவியம் வரைதல், தினமும் சில திருக்குறள்களை வாசித்து பொருள் கூறுதல் அல்லது கற்றல் சாராத விஷயங்களில் குழந்தைகளுக்கு இருக்கும் தனித்திறனை கண்டறிந்து அதில் ஈடுபடுத்துதல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். இதன் மூலம் ஒரே இடத்தில் முடங்கிக் கிடப்பதால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து அவர்களை விடுவிக்க முடியும் என்றார்.
கட்டண விலக்கு அளிக்கவில்லை: இது குறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படவில்லை. ஜூன் மாதத்தில் திறக்க வாய்ப்புகள் குறைவு. இந்தச் சூழலில், தங்களது பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் வேறு பள்ளிகளுக்குச் சென்று விடக் கூடாது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்கும் கட்டணத்திலிருந்து பெற்றோருக்கு எந்தவித விலக்கும் அளிக்க தேவையில்லை.
அதேவேளையில் ஆன்லைன் வகுப்புகள், வாட்ஸ்அப் வீட்டுப் பாடங்கள் மூலம் பெற்றோர்களையும் கவர்ந்து நிலுவையில் உள்ள கட்டணம், அடுத்த கல்வியாண்டுக்கான கட்டணம் ஆகியவற்றை வசூலித்துக் கொள்ள முடியும். இந்தக் காரணங்களுக்காகவே தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றன' என்றனர்.