ஈரோடு: முதல்வரின் அனுமதி பெற்று ஜூன் மூன்றாவது வாரம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு சூரம்பட்டி அம்மா உணவகத்திற்கு இன்று காலை அரிசி மூட்டைகளை வழங்கிய பின்னர் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழக முதல்வர் பழனிசாமி கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் நாள்தோறும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஈரோடு மாவட்டத்தில் 70 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். 21 நாட்கள் புதிய தொற்று இல்லை. இதற்காக மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அதிகாரிகள் கடுமையாக உழைத்துள்ளனர்.
மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். ஊடகங்களுக்கும் நன்றி. அ.தி.மு.க. சார்பில் அம்மா உணவகங்களில் 17-ம் ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும். கரோனா அச்சுறுத்தல் முடிந்த பின்னர் முதல்வர் அனுமதி பெற்று தமிழகத்தில் ஜூன் மாதம் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த அட்டவணை வெளியிடப்படும்.
பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணியும் கரோனா தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.