திருப்பூரில் நிவாரணப் பொருள்கள் கிடைக்காததால் முன்னாள் கவுன்சிலர் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்
திருப்பூரில் அதிமுக சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப்பொருள்கள் கிடைக்கதாததால் முன்னாள் கவுன்சிலர் வீட்டை அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
திருப்பூரில் அதிமுக சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப்பொருள்கள் கிடைக்கதாததால் முன்னாள் கவுன்சிலர் வீட்டை அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் திருப்பூரில் பணியாற்றி வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்தத் தொழிலாளர்களுக்கு அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் தன்னார்வல அமைப்புகள் சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி திருப்பூர் மாநகராட்சி 1ஆவது வார்டுக்கு உள்பட்ட புதுக்காலனியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அதிமுக சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் கிடைக்கவில்லை எனக்கூறி திலகர் நகரில் உள்ள முன்னாள் கவுன்சிலர் வீட்டை முற்றுகையிட்டனர். ஆனால் அங்கு நீண்டநேரம் காத்திருந்த பொதுமக்கள் கவுன்சிலர் வராததால்அனுப்பர்பாளையத்தில் உள்ள 1ஆவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்புக்காக இருந்த ஊழியர்கள் 2 கேட்டையும் இழுத்துப் பூட்டியுள்ளனர். இதுகுறித்து தகவலின்பேரில் அங்கு வந்த 15 வேலம்பாளையம் காவல்நிலைய ஆய்வாளர் முருகையன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் அரசின் நிவாரண பொருட்கள் கிடைக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டால் நியாயம்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்சி சார்பில் வழங்கப்பட்ட உணவு பொருள்கள் கிடைக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல. எனவே இங்கிருந்து உடடினயாக கலைந்து செல்லுங்கள் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.