முகப்பு
தமிழ்நாடு

வங்கி திருட்டு வழக்கிலும் திருவாரூர் முருகனுக்கு ஜாமீன் 

திருச்சி பிரபல நகைக்கடை திருட்டில் வழக்கில் கைதான திருவாரூர் முருகனுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி திருட்டு வழக்கிலும் ஜாமீன் வழங்கி திருச்சி நீதிமன்றம்  திங்கள்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:37 PM
பகிர்:

திருச்சி பிரபல நகைக்கடை திருட்டில் வழக்கில் கைதான திருவாரூர் முருகனுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி திருட்டு வழக்கிலும் ஜாமீன் வழங்கி திருச்சி நீதிமன்றம்  திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நகைக்கடையில் கடந்த ஆண்டு அக்.2 ஆம் தேதி இரவு பக்கவாட்டு சுவரை துளையிட்டு 13 கிலோ நகைகளை திருடப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் திருவாரூரைச் சேர்ந்த முருகன், அவரது அக்கா மகன் சுரேஷ், கணேசன் ஆகியோர் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரிய வந்தது. இதே கும்பல் திருச்சி சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் திருடியது தெரிய வர திருச்சி தனிப்படை காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடினர். 

சுரேஷ் செங்கம் நீதிமன்றத்திலும், முருகன் பெங்களூரூ நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். இவர்களிடமிருந்து கிலோ கணக்கில் நகைகள் மீட்கப்பட்டன. பின்னர், முருகன் பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் அவருக்கு ஒருமாத காலம் அவகாசம் கொடுத்து உள்ளனர். அவருடைய இடது கை, கால் வாதநோயால் செயல்படாமல் போய்விட்டது. வாய்பேச முடியாத நிலையில் தற்போது முருகன் உள்ளார்.

இதையடுத்து அவரது வழக்குரைஞர் ஹரிபாஸ்கர், திருச்சி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். திருச்சி நகைக்கடை வழக்கி பிணையில் விட  கோரிய மனு மீதான விசாரணையில்
 வெள்ளக்கிழமை மாலை முருகனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி கார்த்திக் ஆசாத் உத்தரவிட்டார். ஆனாலும் முருகன் மீது மற்ற திருட்டு வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் பெங்களூரூ  சிறையிலேயே தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது வழக்குரைஞர் ஹரி பாஸ்கர் பஞ்சாப் நேஷனல் வங்கி திருட்டு வழக்கில் ஜாமீன் கோரி அளித்த மனுவின் பேரில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வெள்ளிக்கிழமை அளித்த நகைக்கடை திருட்டு வழக்கில் அளித்த ஜாமீன் அடிப்படையில் வங்கி திருட்டு வழக்கிலும் ஜாமீன் வழங்கி திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் முருகனுக்கு பாலக்கரையில் ஒரு திருட்டு வழக்கு, சென்னையில் 12 வழக்குகளும், கர்நாடகாவில் 46 வழக்குகளும், ஆந்திராவில் ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →