கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக வதந்தி பரப்பிய சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்திற்கு 6 நாள் போலீஸ் காவல் அளித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக சமூக வலைதளங்களில் விடியோ பதிவிட்டு வந்த போலி சித்த மருத்துவர்
தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் கரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சென்னை ஜெய்நகர், கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையின் போலி சித்த மருத்துவர் தணிகாசலம் என்பவர் சமூக வலைதளங்களில் விடியோ பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.
மத்திய மற்றும் மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வித் தகுதியோ, முறையான அங்கீகாரமோ, பதிவோ இல்லாத போலி சித்த மருத்துவர் தணிகாசலம் என்று தமிழக சுகாதாரத்துறை அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, நோய்த்தொற்று தடுப்பு சட்டத்தின் கீழ் தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று அவரை ஆஜர்படுத்திய நிலையில், திருத்தணிகாசலத்திற்கு 6 நாள் போலீஸ் காவல் அளித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.