முகப்பு
தமிழ்நாடு

சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கக் கோரி சேலத்தில் பிகார் தொழிலாளர்கள் மறியல் 

சேலத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட பிகார் தொழிலாளர்களை காவல்துறையினர் வேனில் ஏற்றி அவரவர் பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பி வைத்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:39 PM
பகிர்:

சேலத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட பிகார் தொழிலாளர்களை காவல்துறையினர் வேனில் ஏற்றி அவரவர் பகுதிகளுக்குத் திருப்பி அனுப்பி வைத்தனர்.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரெட்டியூர் மற்றும் பனங்காடு, சிவதாபுரம், கொண்டலாம்பட்டி, பெரிய புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த திரளான தொழிலாளர்கள் வெள்ளி பட்டறைகளில் பணியாற்றி வருகின்றனர்.  மேலும் சிலர் கட்டட வேலைக்கும் சென்று வருகின்றனர். 

கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளிமாநில தொழிலாளர்கள் யார் யார் சேலத்தில் உள்ளனர் என்றும், இவர்களில் சொந்த ஊர் செல்ல விருப்பம் உள்ளவர்கள் யார் என்றும், அந்தந்த பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கணக்கெடுக்கப்பட்டது. இந்த நிலையில் திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட பிகார் தொழிலாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகம் பகுதிக்குத் திரண்டு வந்தனர். பின்னர் பிகார் தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனை அறிந்த சேலம் நகர உதவி கமிஷனர் ஈஸ்வரன் மற்றும் காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான காவல்துறையினர் அங்கு வந்து பிகார் மாநில தொழிலாளர்களை சமரசம் செய்தனர். மேலும், தொழிலாளர்களிடம் காவல்துறை உயரதிகாரிகள் சந்தித்து அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறோம். அதுவரை பொறுத்துக்கொள்ளுமாறு தெரிவித்தனர். ஆனால் பிகார் தொழிலாளர்கள் இதைக் கேட்காமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பிகார் தொழிலாளர்கள் காவல்துறையினர் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் பயந்துபோன பிகார் தொழிலாளர்கள் அனைவரும் அருகில் உள்ள சாலை பகுதிகளில்  தப்பிச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நான்கு காவல்துறை வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டு அதில் பிகார் தொழிலாளர்கள் அனைவரும் ஏற்றப்பட்டனர்.  இதன் பிறகு பிகார் தொழிலாளர்களின் பெயர் விவரம், எந்த ஊர் தற்போது எங்கு வசிக்கிறார்கள் எனப் பட்டியல் எடுக்கப்பட்டது.

பின்னர், அவர்கள் அனைவரும் அவரவர் வசிக்கும் பகுதிக்கு காவல்துறை வாகனத்திலேயே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். பிகார் தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து பிகாருக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் அதிகாரிகள் தெரிவித்துத் திரும்பினர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →