தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே, வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களை, கரோனா பரிசோதனைக்கு அழைத்துச் சென்ற, கிராம உதவியாளர், மாரடைப்பால் மரணமடைந்தார்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி ( வடக்கு ) வி.ஏ.ஓ. அலுவலகத்தில் உதவியாளராக, தம்மம்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் செந்தில் (48) என்பவர் பணியாற்றினார். இந்நிலையில், மேற்குவங்கம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்து, இன்று செவ்வாய்க்கிழமை செந்தாரப்பட்டிக்கு வந்த மூன்று நபர்களுக்கு, தம்மம்பட்டி அரசு மருத்துவமனையில், ஸ்வாப் டெஸ்ட், எடுப்பதற்காக, அவர்களை அழைத்து வந்தார். வரும் வழியில், நெஞ்சு வலிப்பதாக கூறிய, செந்தில் மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள், உடனடியாக, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் முன்பே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த தகவலை அடுத்து, அவரது உடலுக்கு, கெங்கவல்லி வருவாய்த்துறையினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். கரோனா பணியில் ஈடுபட்டிருந்த, கிராம உதவியாளர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், வருவாய்த்துறை ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கெங்கவல்லி வட்டாட்சியர் சிவக்கொழுந்து, உயிரிழந்த செந்திலின் தந்தை சீனிவாசனிடம், அரசின் முதல் கட்ட நிவாரணத் தொகையாக 25 ஆயிரத்தை இன்று வழங்கினார்.