திண்டுக்கல் அருகே உள்ள விவசாயக் கிணற்றில் மூழ்கி கூலித் தொழிலாளர்கள் இரண்டு பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அடுத்துள்ள ராஜக்காப்பட்டி சந்தனக்குடில் பகுதியைச் சேர்ந்த வீராசாமி மகன் சக்திவேல்(38). அதே பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் மகன் பாலுச்சாமி(38). இவர்கள் இருவரும் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மரக்கடையில் கூலித் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், ராஜக்காப்பட்டியிலுள்ள தனியார் விவசாயக் கிணற்றில் குளிப்பதற்காக சக்திவேல் மற்றும் பால்சாமி ஆகியோர் திங்கள்கிழமை சென்றுள்ளனர். மது அருந்திவிட்டு குளிக்கச் சென்ற இவரும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இதில், பாலுச்சாமிக்கு நீச்சல் தெரியாது எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று தீயணைப்புத்துறையினர் உதவியால் இரு சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.