நீச்சல் பழகச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி அண்ணன், தம்பி பலி; தந்தை கண்முன் துயர சம்பவம்
பவானி ஆற்றில் நீச்சல் பழகச் சென்ற அண்ணன், தம்பி இருவரும் தந்தை கண்ணெதிரிலேயே தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பவானி ஆற்றில் நீச்சல் பழகச் சென்ற அண்ணன், தம்பி இருவரும் தந்தை கண்ணெதிரிலேயே தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (50). விவசாயி. இவரது மூத்த மகன் கணேசன் (22). பி.காம்.பட்டதாரி. இளைய மகன் சிவராஜ் (18). பி.காம்.சிஏ முதலாண்டு பயின்று வருகிறார். கரோனா தடைக்காலம் என்பதால் வீட்டிலேயே இருப்பது சிரமம் என்பதால், பவானி ஆற்றில் நீச்சல் பழகிக் கொள்ள தந்தை தமிழ்செல்வனுடன் மகன்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சென்றனர்.
பவானி ஆற்றில் கீழ்வாணி அருகே தண்ணீரில் இறங்கி நீச்சல் அடித்துப் பழகிக் கொண்டிருந்தபோது எதிர்பாராமல் ஆழமான பகுதிக்கு இருவரும் சென்று விட்டனர். இதனால், தண்ணீரில் மூழ்கித் தத்தளித்த இருவரையும் கண்டு தந்தை தமிழ்செல்வன் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதைக் கண்டு அப்பகுதியினர் விரைந்து வந்து தண்ணீருக்குள் தேடியபோது இருவரையும் சடலமாகவே மீட்க முடிந்தது.
Advertisement
இதுகுறித்த தகவலின்பேரில் ஆப்பக்கூடல் போலீஸார் விரைந்து வந்து சடலங்களைக் கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையின் கண்ணெதிரிலேயே இரு மகன்களும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.