சென்னை: வடகிழக்குப் பருவமழை இன்று புதன்கிழமை தொடங்கி தீவிரமடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடகிழக்குப் பருவ மழை வலுவடைவதன் காரணமாகத் தமிழகம் மற்றும் கேரளத்தில் மழை தீவிரமடைய தொடங்கி உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னையில் பரவலாக மழை பெய்யும்.
தமிழகம், புதுச்சேரியில் 5 நாள்களுக்குக் கனமழை பெய்ய உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், கேரளத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழையும் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், தமிழகத்தில் வரும் 7 ஆம் தேதி வரையிலும் கேரளத்தில் வரும் 6 ஆம் தேதி வரையிலும் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 5 நாள்களுக்கு நாட்டின் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், மெரீனா, நந்தனம், மந்தவெளி, வேளச்சேரி, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.