சின்னமனூர் நகராட்சியை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்
தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தை நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தை நூற்றுக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சின்னமனூர் நகராட்சி நிர்வாகம், அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த சின்னமனூர் தேரடி பேருந்து நிறுத்தத்திற்கு இன்று முதல் தடை விதித்தது.
இதனை அடுத்து அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்த நூற்றுக்கணக்கான ஓட்டுநர்கள் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் அகற்ற வேண்டும். ஆனால், நகராட்சி நிர்வாகம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுசம்பந்தமாக சின்னமனூர் நகராட்சி ஆணையாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.