திருச்சியில் முதிய தம்பதி தற்கொலை
திருச்சியில் முதிய தம்பதியினர் கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி: திருச்சியில் முதிய தம்பதியினர் கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி கிராப்பட்டி சிம்கோ காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் மோகன்தாஸ் (70). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில், தனது மனைவி சுமதி (64) உடன் வசித்துவந்தார்.
இந்த நிலையில் இருவரும் நேற்று இரவு பட்டாசு வெடித்து தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடியுள்ளனர். இன்று காலை நெடுநேரமாகியும் கணவன் மனைவி வீட்டைவிட்டு வெளியே வரவில்லை.
இவர்களது மகன் பாலாஜி கதவைத் தட்டிபார்த்துவிட்டு, பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, மோகன்தாஸ் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி சுமதி மரணமடைந்த நிலையிலும் சடலமாகக் கிடந்துள்ளனர்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த, திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல்துறையினர், இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறை விசாரணையில் சுமதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதும், அவர்படும் வேதனையை பார்த்து சகிக்க முடியாததால் இருவரும் தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்ததாகவும் தெரிகிறது.
தங்களது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. நாங்கள் வாழ விரும்பவில்லை. எங்களுடைய மகன் மருமகள், பேத்தி ஆகியோரை பிரிந்து செல்வது கவலையளிக்கிறது. அவர்கள் எங்களைக் காப்பாற்ற நிறைய செலவு செய்தனர் என மோகன் தாஸ் கடிதம் ஒன்றையும் எழுதிவைத்துள்ளார்.
கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரது மரணம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.