சேலம் பெரிய சோரகை பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் முதல்வர் பங்கேற்பு
சேலம் மாவட்டம் பெரிய சோரகையில் நடைபெற்ற சென்றாயப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்றார். அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சேலம்: சேலம் மாவட்டம் பெரிய சோரகையில் நடைபெற்ற சென்றாயப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்றார். அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள பெரிய சோரகை சென்றாயப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை காலை நடந்தது.
இதில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து கார் மூலம் முதல்வர் பெரிய சோரகைக்கு வந்தார்.
வழியில் இரும்பாலை, சோளம்பள்ளம் சித்தனூர், தாரமங்கலம் பைபாஸ், தாரமங்கலம் டவுன் மற்றும் வழிநெடுகிலும் திரளான பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் பெரிய சோரகைக்கு வந்து கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டார்.
கோவிலுக்கு வந்த தமிழக முதல்வரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இதுதவிர ஊர்மக்கள் திரளாக வந்து முதல்வருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
பிறகு முதல்வர் சென்றாய பெருமாள் கோவில் சென்று வணங்கினார்.
கோவில் அருகில் அமைக்கப்பட்டு இருந்த யாகசாலை பூஜையிலும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சுமார் 15 நிமிட நேரம் வரை அமர்ந்திருந்தார்.
கும்பாபிஷேக விழாவையொட்டி சுதர்சன பட்டாச்சாரியார் தலைமையில் யாககுண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்தது.
இதன் பிறகு பல்வேறு ஊர்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புண்ணிய தீர்த்தம் கோவில் கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இந்த கும்பாபிஷேக விழாவிற்காக கோவிலின் மேல் பகுதியில் சிறிய மேடை அமைக்கப்பட்டு இருந்தது .
இதில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .
பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீர் தெளிக்கப்பட்டது.
இதன் பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கோவில் கீழ் பகுதிக்கு வந்து சாமியை வணங்கினார். பின்னர் பொதுமக்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டு வனவாசி புறப்பட்டுச் சென்றார்.
இந்த கும்பாபிஷேக விழாவில் தாரமங்கலம் மற்றும் வனவாசி, மேட்டூர் மற்றும் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவையொட்டி தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.