திருச்செந்தூர் சூரசம்ஹார விழா கடற்கரையில்தான் நடைபெறும்: தமிழக அரசு தகவல்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹார விழா பாரம்பரிய முறைப்படி கடற்கரையில் தான் நடைபெறும் என நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹார விழா, பாரம்பரிய முறைப்படி கடற்கரையில் தான் நடைபெறும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) யாகசாலை பூஜைகளுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெள்ளிக்கிழமை (நவ. 20) நடைபெறவுள்ளது.
அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கோயில் கந்த சஷ்டி மண்டபம் எதிரே கடற்கரை செல்லும் வாயிலில் சூரசம்ஹாரம் நடைபெறும் என்றும் அதேநேரத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு கரோனா பொது முடக்கத்தால் கோயில், விடுதிகளில் தங்கி விரதமிருக்கவும் பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹார விழா பாரம்பரிய முறைப்படி கடற்கரையில்தான் நடைபெறும் என தமிழக அரசு உறுதி அளித்தது. மேலும், திருக்கல்யாணம் 108 மகாதேவர் சன்னதி முன்பும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில், வழக்கினை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.