முகப்பு
தமிழ்நாடு

சென்னையிலிருந்து 450 கி.மீ. தொலைவில் நிவர் புயல்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயலானது கடந்த மூன்று மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:57 PM
மூன்று மணி நேரமாக ஒரே இடத்தில் நீடிக்கும் நிவர் புயல்
பகிர்:


சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயலானது கடந்த மூன்று மணி நேரமாக சென்னையிலிருந்து 450 கி.மீ. தொலைவில் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது.

இன்று காலை புயலாக வலுப்பெற்ற நிலையில், காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை ஒரே இடத்தில் நகராமல் புயல் மையம் கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இருந்த போது மணிக்கு 4 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், கடந்த 3 மணி நேரமாக ஒரே இடத்தில் நீடிக்கிறது.

தென்மேற்கு வங்கக் கடலில், புதுச்சேரியிலிருந்து 410 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 450 கி.மீ. தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இது, செவ்வாய்க்கிழமை காலை புயலாக வலுவடைந்தது.

மேலும், இந்தப் புயல் தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே நவம்பா் 25-ஆம் தேதி பிற்பகலில் கரையை கடக்கவுள்ளது. 

இதையும் படிக்கலாம்.. 2015 பெரு வெள்ளத்துக்குப் பின்னரும் பாடம் கற்கவில்லை : உயர் நீதிமன்றம் கருத்து

அப்போது, மணிக்கு 100 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 120 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கன மழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் தகவலில், இன்று காலை நிலவரப்படி, சென்னை மற்றும் அதனை ஒட்டியிருக்கும் திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் 24 மணி நேரத்துக்கு கன மழை முதல் மிகக் கமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →