புதுச்சேரி: வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரியை வியாழக்கிழமை அதிகாலை கடந்த நிலையில், பெரியளவில் பாதிப்பு ஏதுமில்லை. இருப்பினும், காலை முதல் காற்றும், லேசான மழையும் பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை நிவர் புயலாக உருவெடுத்தது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரிக்கும் மரக்காணத்துக்கும் இடையே வியாழக்கிழமை அதிகாலை 3.48 மணிக்கு கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயல் கரையை கடந்த சமயத்தில் 100 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை கனமழை பெய்தது.
சூறைக்காற்றுடன் கனமழை...: நிவர் புயலால் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் லேசான மழை விட்டு விட்டு பெய்தது. புதன்கிழமை நள்ளிரவு வரை அதீத சூறைக்காற்றுடன் 122.5 மிமீ மழை பதிவானது.
கடல் அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. பல அடி உயரத்துக்கு கடல் அலை வீசுகிறது.
புயல் கரையை கடந்த சமயத்தில் புதுச்சேரியில் 7 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இவற்றை பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினர், பொதுப்பணித்துறையினர் அகற்றி வருகின்றனர்.
தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை பொதுப்பணித்துறையினர் மோட்டார் மூலம் அகற்றி வருகின்றனர். இவற்றை முதல்வர் வே. நாராயணசாமி வியாழக்கிழமை காலை முதல் அனைத்து இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு வருகிறார்.
இதைத் தவிர புயலால் பெரியளவில் பாதிப்பு ஏதுமில்லை.
மீனவர்கள் 4 வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் படகுகள் ஆங்காங்கே பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.
பள்ளிகளுக்கு விடுமுறை...: நிவர் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சனிக்கிழமை (நவ. 28) வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.