கம்பம் நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தவிர்க்க ஒளிரும் பட்டைகள்
கம்பம் நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தவிர்க்க சாலைகளில் உள்ள மரங்களில் ஒளிரும் பட்டைகள் பொருத்தப்படுகின்றன.
கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து குமுளி தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் வரிசையாக மரங்கள் காணப்படுகின்றன. மேலும், இந்த சாலை வழியாக பஸ், கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் என அதிகளவு வாகனங்கள் இரவு பகலாக சென்று வருகின்றன.
இரவு நேரங்களில், சாலையோரத்தில் உள்ள மரங்கள் தெரியாமல், வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.
இதற்குத் தீர்வு காணும் வகையில், கம்பம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ. தட்சிணாமூர்த்தி தலைமையில் போலீஸார் சாலையின் இருபுறமும் உள்ள மரங்களில், ஒளிரும் ஸ்டிக்கர்களை பொருத்தி வருகின்றனர்.
இதேபோல் நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடை தடுப்பு கம்பிகளிலும் ஒட்டி வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறுகையில், சாலையோர மரங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் மற்றும் அபாய வளைவுகளில் எச்சரிக்கை குறியீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், விபத்து அடிக்கடி நடைபெறும் இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
போக்குவரத்து போலீஸாரின் நடவடிக்கைகள் வாகன ஓட்டிகளிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.