ஈரோடு: நீட் தேர்வு விவகாரத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள், பெற்றோர், மக்கள் விரைவில் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பணிவாய்ப்பு பெற வயது தடையில்லை, அவர்கள் எப்பவும் ஆசிரியர் பணி பெற தகுதி படைத்தவர்கள் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கு 6 லாரிகளில் ஒரு லட்சம் போர்வைகள் அனுப்பும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர் கூறியதாவது: இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஒரு லட்சம் போர்வைகள் அனுப்ப முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ரூ. 3.30 கோடி மதிப்பிலான போர்வைகள் அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. எந்த மாநிலமும் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் போது தமிழக அரசு உதவுகிறது. அதன்படி தெலங்கானா மாநிலத்திற்கு தற்போது வேண்டிய உதவிகளை செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பின்னர் அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், ஆசிரியர் தகுதித்தேர்வு எனப்படும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏழு ஆண்டுகளுக்குள் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி பெற தகுதி படைத்தவர்கள். ஆனால் அப்படி பெற முடியவில்லை என்பதால் அவர்கள் ஆசிரியர் தகுதி சான்றிதழ் தகுதி காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். அதன்படி முதல்வர் கடந்த மாதம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி அவர்களுக்கான தகுதி தேர்வு சான்றிதழுக்கான கால நீட்டிப்பை தரும்படி கோரினர்.
அதன்படி, தற்பொழுது ஒருமுறை ஆசிரியர் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற்றவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் பதவி பெறுவதற்கு தகுதி படைத்தவர்கள் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநில அரசைப் பொறுத்தவரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவ இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் பெறுவதற்கு அரசு சட்டம் இயற்றி உள்ளது. இதற்காக ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். எனவே விரைவில் தமிழக மக்களுக்கும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி இது குறித்து வர உள்ளது. வரும் ஜனவரி மாதம் மக்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி வர உள்ளது இது குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கதிரவன், எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ். தென்னரசு, எஸ் ஈஸ்வரன், ராஜா கிருஷ்ணன், சிவசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.