கிசான் திட்ட முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்
கிசான் திட்ட முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கிசான் திட்ட முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், பிரதம மந்திரியின், விவசாயிகளுக்கான ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் தொகையை, விவசாயிகளுக்கு வழங்காமல், முதல்வர் பழனிசாமி போலவே ‘விவசாயி’ என்று சொல்லிக் கொள்ளும் போலிகளுக்கு வழங்கி, பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது.
தமிழ்நாட்டில்தான் ஊழல் ஆட்சி நடைபெறுகிறது என மேடையில் விமர்சனம் செய்த பா.ஜ..க. தலைவர்கள், தேர்தலில் அதே ஊழல் ஆட்சியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டார்கள். கோட்டை முதல், அமைச்சர்களின் பங்களாக்கள் வரை சோதனை நடத்திய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற மத்திய அரசின்கீழ் இயங்கும் நிறுவனங்கள் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதும் தெரியவில்லை.
மக்கள் மறந்து விட்டதாக நினைக்கிறார்கள்; இவை போன்ற காரியங்களை மக்கள் ஒருபோதும் மறப்பதுமில்லை; மன்னிப்பதுமில்லை; நேரம் வரும்போது கடுமையாகத் தண்டித்து விடுவார்கள். 'ஊழலை ஒழிக்க வந்தவர் பிரதமர் மோடி' எனப் பெருமை பேசிக்கொண்டே, அ.தி.மு.க.,வினரின் ஊழலை மறைத்து, அரசியல் இலாபம் தேடும் போக்கை மேற்கொண்டால் ஊழல் ஒழிந்துவிடுமா? அ.தி.மு.க.,வின் ஊழல்களுக்கு உடந்தையாக இருக்கிறதா பா.ஜ.க.? என்கிற கேள்வி, பாமர மக்களின் மனதிலும் எழுகிறது; அந்தக் கேள்வி, அப்படியே நின்று வளரும் தன்மை கொண்டது.
பிரதமரின் பெயரிலான விவசாய நிதி உதவியிலும், வீடு கட்டும் திட்டத்திலும் அப்பட்டமாக ஊழல் செய்துள்ள அ.தி.மு.க ஆட்சியாளர்கள் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தி, நியாயமான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.