மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களை அரசு எச்சரிக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கரோனா சிகிச்சைகளுக்கான கட்டணங்களை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களே கட்டாயம் ஏற்றுக் கொள்ள முதல்வர் எச்சரிக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கரோனா சிகிச்சைகளுக்கான கட்டணங்களை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களே கட்டாயம் ஏற்றுக் கொள்ள முதல்வர் எச்சரிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் சிகிச்சைக் கட்டணங்களை ஏற்க மறுப்பதாக வரும் செய்திகள் மிகுந்த கவலை தருவதாக இருக்கின்றன.
பணியில் இருப்போர் மட்டுமின்றி - ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவரும் இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, கரோனா நோயை விடக் கடுமையான தண்டனையைத் தினமும் அனுபவித்து வரும் அவலம் அ.தி.மு.க. அரசால் ஏற்பட்டிருப்பதற்கு, கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அரசு சார்ந்த மருத்துவக் காப்பீட்டில், கரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்காக, சிறப்பு நிதி ஒதுக்கி கட்டண வழிகாட்டு முறையைத் தமிழக அரசு 24.06.2020 அன்று (G.O. MS No. 280) ஆணையிட்டதில், பல குளறுபடிகள். அந்த ஆணையின்படி கரோனா நோய்த் தொற்று, ஆர்டி பிசிஆர் (“RT PCR”) பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு மட்டும்தான், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் சிகிச்சைக்கான கட்டணங்களை ஏற்றுக் கொள்கின்றன என்பது கொடுமையாக இருக்கிறது.
மருத்துவ அளவுகோல்களின் படியான தொற்று (Clinical Corona - CT Scan) மற்றும் சந்தேகிக்கக் கூடிய கரோனா தொற்றுநிலை (Suspected Corona infection) ஆகிய மருத்துவச் சிகிச்சைக்கான கட்டணங்களை, மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்பதில்லை என்பது முரண்பாடாக இருக்கிறது.
ஆகவே, கரோனா நோய்த் தொற்று குறித்த மேற்கண்ட மூன்று வகையிலான கரோனா சிகிச்சைகளுக்குமான கட்டணங்களை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களே கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும்; அப்படி ஏற்றுக் கொள்ள முடியாது என மறுக்கும் காப்பீட்டு நிறுவனங்களை, தமிழக அரசு தகுதி நீக்கம் செய்யும் என்று எச்சரிக்கை செய்ய வேண்டும். தாமதம் இல்லாமல் இதைச் செய்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் காப்பாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."