மதுரைக்கு பைப் லைன் மூலம் குடிநீர்: கூடலூர் விவசாயிகள் எதிர்ப்பு
தேனி மாவட்டம் லோயர் கேம்பிலிருந்து தனியாக பைப் லைன் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு கூடலூர் விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் லோயர் கேம்பிலிருந்து தனியாக பைப் லைன் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு கூடலூர் விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் லோயர் கேம்பில் இருந்து வெளியேறும் முல்லைப் பெரியாற்றில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் குடிநீர் தேவைக்காக உறை கிணறு அமைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
அதேநேரத்தில் மதுரை மாநகருக்கு வைகை அணையிலிருந்து குடிதண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது புதிய திட்டம் தயாரித்து முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தனியாக இரும்புக் குழாய் அமைத்து நேரடியாக மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருகிறது. ஆனால், மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு கூடலூர் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
இதுபற்றி நிர்வாகி செங்குட்டுவன் கூறுகையில், மதுரை மாநகர மக்களுக்கு குடிநீர் கொண்டு செல்வதை தடுப்பது எங்கள் நோக்கம் அல்ல, நேரடியாக லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு இரும்புக் குழாய் மூலம் கொண்டு செல்லக்கூடாது.
தற்போது மதுரைக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது, வைகை அணையை தூர்வாரினால் மதுரைக்கு அங்கிருந்து கூடுதலாக தண்ணீர் கொண்டு செல்லலாம். இந்தத் திட்டத்தை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும், அதைவிடுத்து லோயர் கேம்பில் இருந்து மதுரைக்கு குடி தண்ணீர் கொண்டு சென்றால் விவசாயிகள் சங்கம் போராடும் என்றார்.