காஞ்சி அத்திவரதர் திருக்குளத்தில் மத்திய நீர்வளத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஆண்டு நடைபெற்றது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து தொடர்ந்து 48 நாள்கள் பொதுமக்கள் தரிசனத்திற்காக அனந்தசரஸ் குளத்திலிருந்து அத்திவரதரை எழுந்தருளச் செய்து மக்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் 48 நாள்கள் முடிந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி மீண்டும் திருக்குளத்தில் அத்திவரதர் எழுந்தருளப்பட்டார். இதனைத் தொடர்ந்து குளத்தின் தன்மையைப் பாதுகாக்கவும், அசுத்தமாகாமல் இருக்கவும் மக்களை அனுமதிக்கக் கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடுக்கப்பட்டது.
இவ்வழக்கில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அனந்தசரஸ் திருக்குளத்தின் நீரின் தன்மையை அறிந்து மாவட்ட நீதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மத்திய நீர்வளத்துறை ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின்படி மத்திய நீர்வளத் துறையின் உதவி நீர்வள ஆராய்ச்சி அதிகாரி ராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு, அனந்தசரஸ் குளத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்து, ஆய்வு மாதிரிகளை அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர்.