மரத்தின் மீது கார் மோதி விபத்து: மின்வாரிய இளநிலை பொறியாளர் பலி
வந்தவாசி அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில், கொடைக்கானல் மின்வாரிய இளநிலை பொறியாளர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
வந்தவாசி அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில், கொடைக்கானல் மின்வாரிய இளநிலை பொறியாளர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த கீழ்புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன்(56). இவர் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மின்வாரிய இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர் தனக்கு சொந்தமான காரில் மனைவி கீதா(50), மகன்கள் பூவிழிராஜன்(30), தீபன் சக்கரவர்த்தி(26) ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்தவாசி வழியாக செய்யாறு நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை பூவிழிராஜன் ஓட்டியுள்ளார்.
வந்தவாசி-திண்டிவனம் சாலையில், வந்தவாசி அருகேயுள்ள தனியார் கல்லூரி அருகில் செல்லும்போது சாலையோர மரத்தின் மீது கார் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், கங்காதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கீதா, பூவிழிராஜன், தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக 3 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வந்தவாசி டிஎஸ்பி பி.தங்கராமன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் சென்று கங்காதரனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.