ஹைவேவிஸ் - மேகமலை கிராமங்களில் யானை நடமாட்டத்தால் மலை கிராமத்தினர் அச்சம்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ் மேகமலை மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை நடமாட்டம் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ் மேகமலை மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை நடமாட்டம் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி அமைந்துள்ளது. இங்கு மேகமலை , ஹைவேவிஸ், மணலாறு, மேல் மணலாறு வெண்ணியாறு, இரவங்கலாறு ,மகாராஜா மெட்டு ஆகிய ஏழு மலைக் கிராமங்கள் உள்ளன.
இங்கு சுமார் 8,000 பேர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக வசித்து வருகின்றனர்.
ஓங்கி உயர்ந்த மலை குன்றுகள், பள்ளத்தாக்குகள், தேயிலைத் தோட்டங்கள் , அடர்ந்த வனப் பகுதிகள் இப்பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டு மாடு உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் வசிப்பிடமாக இருந்து வருகிறது.
இவற்றில் ஒரு சில வன விலங்குகள் வழிதவறி அவ்வப்போது குடியிருப்புகளைச் சுற்றி வருவதோடு உணவுப்பொருள்களை தேடி உலா வருவது வழக்கம். அவராக கடந்த சில நாட்களாக மகாராஜா மெட்டு, இரவங்கலாறு பகுதியில் ஒற்றை யானை ஒன்று குடியிருப்புப் பகுதியில் நடமாடி வருகிறது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டியடிக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.