முகப்பு
தமிழ்நாடு

செப். 14ல் நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்: கு.பாலசுப்பிரமணியன்

நியாயவிலைக் கடை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செப்.14-ஆம் தேதி திங்கள்கிழமை தமிழகம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்

Updated On : 13 செப்டம்பர், 2020 at 3:28 PM
சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:49 PM

நியாயவிலைக் கடை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செப்.14-ஆம் தேதி திங்கள்கிழமை தமிழகம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரணியன் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை அன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

நியாயவிலைக்கடை பணியாளர்கள் போராட்டம் குறித்து 5 முறை அரசு அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொண்டபடி ஒரு கோரிக்கையைக் கூட நிறைவேற்றவில்லை. தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் 8 முறை கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. கரோனா தொற்றில் இறந்து போகும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரினோம். இதுவரை 6 பணியாளர்கள் இறந்துள்ளனர். இருவருக்கு மட்டுமே நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 பணியாளர்களுக்கு வழங்கவில்லை.

Advertisement

சனிக்கிழமை அன்று திருவாரூரில் முருகவேல் என்ற பணியாளர் கரோனா தொற்றால் இறந்துள்ளார். இதுபோன்ற இறப்புகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையை கணக்கில் வைத்துக் கொண்டு அனைத்து நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

அதேபோன்று கரோனா பாதித்த பணியாளர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும். மாதந்தோறும் பணியாளர்களிடம் தொகை பிடித்தம் செய்து, மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்த்து இறந்து போகும் பணியாளர்களுக்கு ரூ. 25 லட்சம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்கத் தயாராக இல்லை.

அதுமட்டுமல்ல, மாவட்டங்களில் பெண் பணியாளர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யப்படுகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்திலும், திருவள்ளூர் மாவட்டத்திலும், சேலம் மாவட்டத்திலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளை பாதுகாக்குகிறார்களே தவிர பெண் பணியாளர்களை பாதுகாக்க இந்த அரசு தவறிக் கொண்டு இருக்கிறது. கரோனா காலத்திலும் கூட சரியான எடையில் பொருள்களை வழங்குவதில்லை. நூறு சதவீத ரேஷன் கார்டுகளுக்கும் பொருள்கள் வழங்குவதில்லை.

மேலும் அரசு அறிவிக்கும் ஊக்க ஊதியம், பயணப்படி, மாதாந்திர ஊதியம் ஆகியவற்றைக் கூட அதிகாரிகள் முறையாக வழங்கவில்லை. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களையும் சந்தித்து எங்களது சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை கொடுத்துள்ளோம்.

சட்டப்பேரவை திங்கள்கிழமை தொடங்கப்படும் வேளையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உத்தேசித்தோம். மறியல் செய்தால் அதன் மூலம் கரோனா தொற்றும் பரவும் ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தினால், திங்கள்கிழமை (செப்.14) ஓட்டுமொத்தமாக தமிழக முழுவதும் கூட்டுறவுத்துறை மூலம் இயங்கும் அனைத்து நியாயவிலைக்கடை பணியாளர்களும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

மேலும், திங்கள்கிழமை காலை அனைத்து இணைப் பதிவாளர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்கு பிறகாவது தமிழக முதல்வர் எங்களது சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

பேட்டியில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா, மாநில துணைத் தலைவர் துரை.சேகர், மாவட்ட துணைத் தலைவர் கே.நடராஜன், ஆர்.செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.