புது தில்லி: கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மத்திய அரசு அறிவித்த பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 97 பேர் சிறப்பு ரயில்களில் பயணித்த போது மரணம் அடைந்துள்ளனர்.
மே 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31 வரை இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் பயணம் செய்த 97 புலம்பெயர் தொழிலாளர்கள் மரணம் அடைந்த விவகாரத்தை, மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
வெள்ளிக்கிழமை திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்தார்.
அதில், மாநில காவல்துறைகள் அளித்த புள்ளி விவரத்தின் அடிப்படையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் பயணித்த 97 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாநில காவல்துறை சார்பில் இயற்கைக்கு விரோதமான மரணம் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
தீவிர பொதுமுடக்கக் காலத்தில் உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களின் மரணம் குறித்து புள்ளி விவரம் எதுவும் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அளித்த பதில் கடும் விமரிசனங்களை ஏற்படுத்திய நிலையில், ரயில்வே அமைச்சர் இந்த பதிலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.