கால்பந்து உலகக் கோப்பைக்குத் தேர்வானதால் காங்கோவில் பொது விடுமுறை!
காங்கோ நாட்டில் பொது விடுமுறை அளிக்கப்பட்டது குறித்து...
கால்பந்து உலகக் கோப்பைக்கு 52 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக காங்கோ அணி தேர்வாகியுள்ளதால், அந்த நாட்டில் இன்று (ஏப்.1) பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ நாட்டின் அதிபர், அமைச்சர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
முன்னதாக, 1974 உலகக் கோப்பையில் இந்த நாட்ய் ஜெய்ரா எனும் பெயரில் இருந்தபோது உலகக் கோப்பைக்குத் தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மெக்ஸிகோவில் ஸபோபன் திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் 90 நிமிஷங்கள் வரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை. பின்னர், ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது.
சரியாக 100ஆவது நிமிஷத்தில் காங்கோ அணியின் சிபெங்காவின் கார்னர் கிக்கில், அதே நாட்டின் டிஃபெண்டர் ஆக்செல் டுவான்செபே கோல் அடித்து அசத்தினார்.
இந்தப் பொது விடுமுறை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டுமென அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நமது சிறுத்தைகள் 2026 உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளதைத் தொடர்ந்து, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் பொதுமக்களுக்கு, இன்று ஏப்.1ஆம் தேதி நாடு முழுவதும் பொது விடுமுடையாக அறிவிக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த நவம்பரில் நைஜீரியாவை பெனால்யியில் வென்றது காங்கோ. இதனால், நைஜீரியா கால்பந்து கழகம் காங்கோ அணியின் வீரர்கள் சிலர் இரட்டைக் குடியுரிமைக் கொண்டுள்ளதாகப் புகார் அளித்தது.
இருந்தும் ஃபிஃபா அந்தப் புகாரினை தள்ளுபடி செய்தது. பின்னரே, ஆப்ரிக்கா பிளே ஆஃப்ஸ் சுற்றில் காங்கோ விளையாடியதும் குறிப்பிடத்தக்கது.