இறந்த பெண்ணின் உடலை தராததால் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இறந்த பெண்ணின் உடலை தராததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இறந்த பெண்ணின் உடலை தராததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் கீழப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்- காளீஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தொடர்ந்து கர்ப்பம் தரித்த காளீஸ்வரி பிரசவத்திற்காக வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பிரசவம் நடைபெற்றதை தொடர்ந்து பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாயின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக மாலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். மதுரை அரசு மருத்துவமனையில் காளீஸ்வரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக காளீஸ்வரி உடல் பிணவரையில் வைக்கப்பட்டது.
மோகன்ராஜ்- காளீஸ்வரி தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் நிறைவு பெறாததால் கோட்டாட்சியர் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடைபெற வேண்டும் என்ற மதுரை மருத்துவர்கள் ஞாயிற்றுக்கிழமை தான் காளீஸ்வரியின் உடல் கிடைக்கும் என உறவினர்களிடம் தெரிவித்தனர்.
இத்தகவல்களை அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள காளிஸ்வரியின் உறவினர்கள் ஆண்கள் - பெண்கள் உள்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சர்ச் பாயிண்ட் என்ற நான்குவழி சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் சமாதானம் செய்தும் சமாதானத்தை ஏற்காத உறவினர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இறந்த பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலால் நான்கு திசைகளிலும் 3 கிலோ மீட்டர் அளவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுமார் அரை மணி நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.