துரித ஆய்வு உபகரணங்கள் 4 லட்சம் பெற கொள்முதல் ஆணை பிறப்பிப்பு: முதல்வர் தகவல்
தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு 12 குழுக்கள் அமைக்கப்பட்டு, அந்த குழுக்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றன. துறைச் செயலாளர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு சிறப்பாக செயல்பட்டு வருவதால் தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
Advertisement
இதுவரை கரோனா பரிசோதனை 2,10,538 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 92,814 பேர். 28 நாட்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 32,075. மொத்தம் அரசு சார்பில் 12, தனியார் சார்பில் 7 என மொத்தம் 19 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.
ஆய்வக பரிசோதனை மேற்கொண்டவர்கள் 6,095 பேர். கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 738. மேலும் 344 பேருக்கு கரோனா பரிசோதனை முடிவுகள் வரவுள்ளன. குணமடைந்தோர் - 21 பேர், இறந்தவர்கள்- 8 பேர். 371 வென்டிலேட்டர்கள் உள்ளன. 22,049 அரசு மற்றும் 10,322 தனியார் படுக்கைகள் தயாராக உள்ளன.
உடல் பாதுகாப்பு உடைகள், காய்ச்சல் உள்ளிட்ட மருந்துகள், முகக்கவசங்கள் அனைத்தும் போதிய அளவு உள்ளன.
2500 வெண்டிலேட்டர் பெறுவதற்கு கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று துரித ஆய்வு உபகரணங்கள் 4 லட்சம் பெறுவதற்கு கொள்முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், 50000 வென்டிலேட்டர்கள் இன்று இரவு வருகிறது, 20,000 உபகரணங்கள் மத்திய அரசு வழங்குகிறது.
குடும்ப அட்டைக்கு அரிசி மற்றும் நிவாரண நிதியாக ரூ.1,000 வழங்கப்படுகிறது. கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன' என்று தெரிவித்தார்.