கரோனா தடுப்புப் பணிக்கு உடனடியாக ரூ.1,000 கோடி வழங்குக: பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை
கரோனா தடுப்புப் பணிக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
கரோனா தடுப்புப் பணிக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
கரோனா தடுப்பில் மேற்கொள்ளவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொண்டார்.
அப்போது தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் விவரம் பின்வருமாறு:
Advertisement
தமிழக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு அனுமதித்துள்ள பணிகள் தமிழகத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையால் கரோனா இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழகத்தில் 1885 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,020 பேர் (54%) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிவோருக்கு ஊதியத்தை ரொக்கமாக வழங்க அனுமதி அளிக்க வேண்டும். வங்கிக் கணக்குகளில் அளிப்பதால் அவர்கள் வங்கிகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க அனுமதி வழங்க வேண்டும்.
சிறு, குறு தொழில் துறையினர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஜிஎஸ்டி, வருமான வரி செலுத்த 6 மாத அவகாசம் அளிக்க வேண்டும்.
கரோனா சிகிச்சைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை வழங்க வேண்டும்.
பி.சி.ஆர். பரிசோதனைக் கருவிகளை மத்திய அரசு கூடுதலாக வழங்க வேண்டும்.
விவசாயப் பொருள்கள் போக்குவரத்துக்கான மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.