சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம்
கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றி அரசாணையை வெளியிட வேண்டியும், ஊதிய தொகையை முறையாக வழங்கிடக் கோரியும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றி அரசாணையை வெளியிட வேண்டியும், ஊதிய தொகையை முறையாக வழங்கிடக் கோரியும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
2013 முதல் தமிழக அரசு நிர்வகித்துவரும் மருத்துவக் கல்லூரியில் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு நிகராக 9.8 லட்சம் ரூபாய் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து இறுதி விசாரணையை 2020 மார்ச் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. கரோனா தொற்று பரவலின் காரணமாக இறுதி விசாரணை நிலுவையில் உள்ளது.
2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் 2020-21 பட்ஜெட் தாக்கல் செய்யும்போது இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகப் பெயர் மாற்றம் செய்ய அறிவிக்கப்பட்டது. கடந்த 5 மாதமாக கரோனா தொற்று நோயாளிகளுக்கு, கடலூர் மாவட்ட கரோனா உயர் சிறப்பு மருத்துவமனையாக இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
Advertisement
இந்நிலையில் கடந்த 5 மாதமாக கரோனா தொற்று காலத்தில் இரவு பகல் பாராமல் உழைத்து மருத்துவ சேவை புரியும் மருத்துவ கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களிடம் உச்ச நீதிமன்ற தடைக்கு எதிராக 9.8 லட்சம் ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் நிர்ப்பந்திக்கிறது. ஆகஸ்ட் 31, 2020-க்குள் 9.8 லட்சம் 2020-21 கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணமும் செலுத்த வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் நிர்ப்பந்திக்கிறது. இதனால் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே தமிழக அரசு, கரோனா தொற்று காலத்தில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் நலன் கருதியும், இரவு பகல் பாராமல் உழைத்து மருத்துவ சேவை புரியும் மருத்துவக் கல்லூரி மாணவர்களைக் கருத்தில் கொண்டும் மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் அரசு நிர்ணயித்த அரசு மருத்துவ கல்விக் கட்டணத்தை இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வசூலிக்க ஆவன செய்யவேண்டும். நிலுவையில் உள்ள மாத ஊதிய தொகையை (STIPEND & Salary) முறையாய் வழங்கிட தமிழக அரசு ஆவன செய்யவேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.