ஜிப்மருக்கு இணையாக கிண்டியில் கரோனா சிகிச்சை மையம்: முதல்வர் பழனிசாமி
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னயில், கரோனா பாதித்த நோயாளிகளுக்காக அனைத்து வசதிகளுடன் ரூ.127 கோடி மதிப்பில் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட் சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது, கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையும் படிக்கலாம்.. அனைத்து வசதிகளுடன் கிண்டியில் கரோனா சிகிச்சை மையம்: முதல்வர் தொடக்கி வைத்தார்
மிகச் சிறப்பான அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக இது கட்டப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக இந்த கரோனா மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது.
கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வசதிகளுடன் 80 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் சிறப்பான சிகிச்சை அளிப்பதற்காக பல முக்கிய மருத்துவ நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கரோனா பாதித்து மூச்சுத் திணறலுடன் வருபவர்களுக்கு இங்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இம்மையத்தில் 750 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையமாக தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது. இவற்றுள் ஆக்சிஜன் வசதியோடு கூடிய 300 படுக்கை வசதிகளும், 60 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவும் அடங்கும்.
இம்மையத்தில் 16 கூறு சி.டி.ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எக்கோ கார்டியாகிராம், 6 நடமாடும் எக்ஸ்-ரே கருவிகளும், 28 வெண்டிலேட்டர்கள், 40 உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகள், 10 நடமாடும் ஆக்சிஜன் வழங்கும் கருவிகள் ஆகியவைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு உருவாகும் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வளாகம் முழுவதும் வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.