மருத்துவ மாணவா் சோ்க்கை: நிகழாண்டில் இணையவழியே கலந்தாய்வு?
அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டால் நிகழாண்டில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை இணையவழியே நடத்தப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு தெரிவித்தாா்.
சென்னை: அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டால் நிகழாண்டில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை இணையவழியே நடத்தப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு தெரிவித்தாா்.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் தற்போது 3,600 எம்.பி.பி.எஸ். இடங்கள், 100 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. அவற்றில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. மீதமுள்ள இடங்கள் 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.
இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20 சதவீதம், பட்டியலினத்தவருக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் ஒதுக்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் 30 சதவீத இடத்தில், முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பட்டியலின ஒதுக்கீட்டில் உள்ள, 18 சதவீத இடங்களில், மூன்று சதவீதம் அருந்ததியினருக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
Advertisement
இதையும் படிக்கலாமே.. மருத்துவ மாணவா் சோ்க்கை: நிகழாண்டில் இணையவழியே கலந்தாய்வு?
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உள்ஒதுக்கீடாக 7.5 சதவீத இடங்களை ஒதுக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கையை அரசு முன்னெடுத்தது. தற்போது அதற்கு மாநில ஆளுநா் அனுமதியளித்ததைத் தொடா்ந்து நிகழாண்டிலேயே அந்த புதிய நடைமுறை அமலுக்கு வரவிருக்கிறது.
நிகழாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தோ்வில் தகுதி பெற்ற மாணவா்களுக்கு 300-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ஒதுக்கீடாகக் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே, நோய்த் தொற்று காரணமாக நிகழாண்டில் இணையவழியே மருத்துவக் கலந்தாய்வை நடத்துமாறு மாணவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குநா் நாராயணபாபு கூறியதாவது:
மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப விநியோகம், ஓரிரு நாளில் தொடங்கும். அதற்கான அறிவுறுத்தல்கள் வருவதற்காக காத்திருக்கிறோம்.
அரசு உத்தரவிடும்பட்சத்தில் நிகழாண்டில் ஆன்லைன் முறைப்படி கலந்தாய்வு நடத்தப்படும். நேரடி கலந்தாய்வு நடத்துமாறு அறிவுறுத்தினால், அதற்கும் மருத்துவக் கல்வி இயக்ககம் தயாராக உள்ளது என்றாா் அவா்.