சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 11 ஆயிரமாக உயர்வு
சென்னையில் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 11 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
சென்னை: சென்னையில் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 11 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக பத்தாயிரத்தில் நீடித்திருந்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மெல்ல 9 ஆயிரத்துக்குக் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் 11 ஆயிரத்தை எட்டிவிட்டது.
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை தற்போது 11,043 ஆக உயர்ந்துள்ளது சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிய வந்துள்ளது.
Advertisement
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. சென்னையில் கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக சற்று அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் விகிதம் 6 சதவீதமாகக் குறைந்திருந்த நிலையில் தற்போது 7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னையில் இதுவரை 1,64,744 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,179 பேர் பலியாகியுள்ளனர். அதே நேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 1,50,522 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 11,043 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், மண்டல வாரியாக பார்த்தால், கோடம்பாக்கத்தில் 1,231 பேரும், அண்ணா நகரில் 1,245 பேரும், திருவிக நகரில் 903 பேரும், ராயபுரத்தில் 880 பேரும், அடையாறில் 971 பேரும், வளசரவாக்கத்தில் 856 பேரும், அம்பத்தூரில் 791 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.