விராலிமலை: விராலிமலையில் கடந்த சில நாள்களாக கட்டுக்குள் இருந்த கரோனா பாதிப்பு என்பது தற்போது வேகமெடுக்க தொடங்கி உள்ளது.
கடந்த மார்ச் 13 -ஆம் தேதிக்கு பிறகு ஏப்ரல் 6-ஆம் தேதி வரை எந்த ஒரு பாசிட்டிவ் கேசும் வராத நிலையில், தற்போது கடந்த 7 ஆம் தேதியிலிருந்து கரோனோ பாசிட்டிவ் கேஸ் அதிகரித்துள்ளது. அந்தவகையில் விராலிமலை பகுதியில் தற்போது மொத்தம் 23 கொரோனா பாசிட்டிவ் கேஸ் உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
விராலிமலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக விராலிமலை சுகாதாரத்துறை சார்பில் விராலிமலையில் 3 பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வேலி அமைத்து அடைக்கப்பட்டிருந்து.
இந்த நிலையில் தற்போது அடைக்கப்பட்டிருந்த வேலிகள் பிரிக்கப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்ததோடு எதற்காக அடைத்தார்கள். எதற்காக பிரித்தார்கள் என்று குழப்பமடைந்துள்ளனர்.
விராலிமலை காமராஜர் நகர் அருகே உள்ள ஈஸ்வரி நகர், டைமண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 8 பேர் தற்போது கரானா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் விராலிமலை சுகாதாரத்துறையினர் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஈஸ்வரி நகர் நுழைவுவாயில், டைமண்ட் நகர் நுழைவுவாயில், நான்கு வழி சாலை வழியாக டைமண்ட் நகர் மற்றும் கோரிமேடு செல்லும் பாதையை சவுக்கு மரக் கட்டைகளால் அடைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இதுதொடர்பாக சன் நியூஸ் செய்தியில் இன்று காலை ஸ்க்ரோலிங் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலர்கள் அறிவுறுத்தலின் பெயரில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வேலி தற்போது பிரிக்கப்பட்டு வருகிறது.
வெள்ளிக்கிழமை இரவு அமைக்கப்பட்ட வேலி இன்று சனிக்கிழமை காலை பிரிக்கப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுவதோடு அச்சம் நிலவி வருகிறது.
குறிப்பாக கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பாதிப்குள்ளான பகுதியின் நுழைவாயில் அடைக்கப்படும்.
கரோனா பாதித்தோர் சிகிச்சை முடிந்து சகஜ நிலை திரும்பிய பிறகுதான் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்ட வேலி அகற்றப்படும்.
ஆனால் தற்போது கரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிகிச்சையில் உள்ள நிலையிலே அடைக்கப்பட்ட வேலி பிரிக்கப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.
இது பாதுகாக்கப்பட்ட பகுதியின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்காக எடுக்கப்படும் முயற்சியாகவே சமூக ஆர்வலர்கள் மத்தியில் கருதப்படுகிறது.