திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நவீன சிகிச்சைக் கருவி மாயம்
திருச்சி அரசு தலைமை மருத்துவமனை பொது அறுவை சிகிச்சைப் பிரிவில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான இரைப்பை மற்றும் குடல் உள்நோக்கி கேமரா கருவி மாயம்
திருச்சி: திருச்சி அரசு தலைமை மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை பிரிவில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான இரைப்பை மற்றும் குடல் உள்நோக்கி கேமரா கருவி (Endoscopy camera interface) மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனையில் அமைந்துள்ள பொது அறுவை சிகிச்சை பிரிவில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள இரைப்பை மற்றும் குடல் உள்நோக்கி கேமரா (Endoscopy camera interface) என்கிற கருவி பயன்படுத்தப்படுகிறது.
அதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் ஆகும். இந்த கருவியை மருத்துவமனையில் உள்ள பிற துறை மருத்துவர்களும் தங்களின் தேவைக்கேற்ப நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்துவார்கள்.
இந்த கருவியை கடைசியாக காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் திடீரென அந்த கருவி காணாமல் போயுள்ளது.
அதனை மருத்துவமனை ஊழியர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அது குறித்து விசாரணை செய்ய அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஜீலியானா மற்றும் நேரு ஆகிய இரண்டு பேர் தலைமையில் துறைரீதியான விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த கருவியை கடைசியாக பயன்படுத்திய காது,மூக்கு மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை நிபுணரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.
அரசு தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் இருந்த கருவி மாயமாகி இருப்பது மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது