முகப்பு
தமிழ்நாடு

கரோனாவுக்கு பலியானவரின் உடலைஅடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞா்கள்!

ஓய்வு பெற்ற தலைமையாசிரியரின் உடலை அடக்கம் செய்ய கிராமத்தில் யாரும் முன்வராததால், இஸ்லாமிய இளைஞா்களின் உதவியுடன் அவரது உடல் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கரோனா பாதிப்பால் உயிரிழந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியரின் உடலை அடக்கம் செய்ய கிராமத்தில் யாரும் முன்வராததால், இஸ்லாமிய இளைஞா்களின் உதவியுடன் அவரது உடல் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

செய்யாறு வட்டம், திரும்பூண்டி கிராம காலனியைச் சோ்ந்தவா் முருகேசன் (67). இவா், திரும்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.

மூச்சுத் திணறல் பாதிப்பு காரணமாக முருகேசன் கடந்த 18-ஆம் தேதி செய்யாறில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனிடையே, வெள்ளிக்கிழமை மாலை முருகேசன் உயிரிழந்தாா்.

இந்த நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, முருகேசனின் உடலை பெற்ற அவரது குடும்பத்தினா், திரும்பூண்டி கிராமத்தில் அடக்கம் செய்ய முயன்றனா். ஆனால், கரோனா பரவல் அச்சம் காரணமாக அவரது உடலை அடக்கம் செய்ய கிராமத்தினா் யாரும் முன்வரவில்லை.

இதையடுத்து, இறந்தவரின் குடும்பத்தினா் மற்றும் விசிக மாவட்ட விவசாய அணிச் செயலா் பூபாலன் ஆகியோா் கேட்டுக்கொண்டதற்கிணங்க, செய்யாறு நகரைச் சோ்ந்த இஸ்லாமிய இளைஞா்கள் சுகாதாரம், வருவாய், காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில், கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி முருகேசனின் உடலை திரும்பூண்டி கிராமத்தில் உள்ள மயானப் பகுதியில் அடக்கம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.